பழையன கழிதலும் புதியன புகுதலும்


(ஹிந்து மதஞானிகள்) யாரும் ‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்று பிரசாரம் செய்யவில்லை. ‘மனிதர்கள் அனைவரும் கடவுளின் பார்வையில் சமமானவர்கள்’ என்றே பிரசாரம் செய்தனர். இது யாரையும் தொந்தரவு செய்யாத கருத்து என்பதால், இதை நம்புவதில்லோ, பிரசாரம் செய்வதிலோ யாருக்கும் யாதொரு தயக்கமும் இருக்க வாய்ப்பில்லை. 
.....

ஹிந்து சமுதாயம் ஒரு தார்மீக புத்துருவாக்கத்தை வேண்டி நிற்கிறது; அதைத் தள்ளிப் போடுவது ஆபத்து. இந்த புத்துருவாக்கத்தை தீர்மானிக்கவும், வழிநடத்தவும் வல்லவர்கள் யார் ?  தம்மளவில் அறிவுசார் புத்துருவாக்கம் பெற்றவர்களும் , அறிவுசார் விடுதலையின் வழியாக நம்பிக்கைகளைக் கட்டமைத்துக்கொள்ளும் நேர்மையும், உறுதியும் கொண்டவர்களும் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள்.  

இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால், நமக்குக் காணக்கிடைக்கும் ஹிந்து சமுதாயத் தலைவர்கள்  எவரும் இத்தகைய பணிக்கு பொருத்தமானவர்கள் அல்லர். முதல்கட்ட அறிவுசார் புத்துருவாக்கம் அடைந்தவர்கள் என்று கூட அவர்களைப் பற்றிச் சொல்ல இயலாது. அப்படி ஒரு புத்துருவாக்கத்தை அவர்கள் அடைந்திருந்தார்கள் என்றால், பாமரப் பெருங்கூட்டத்தைப் போல் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதையும், பாமரர்களை ஏமாற்றும் போக்கையும் நாம் அவர்களிடையே பார்க்க மாட்டோம்.
.....
 ஹிந்து சமுதாயம் உளுத்துப்போய்க்கொண்டிருக்கும் இந்நிலையிலும், இத்தலைவர்கள்  வெட்கமின்றி  பழைய கொள்கைளின் மேன்மைகளை உவந்து பேசிக்கொண்டிருப்பர் – அந்தக் கொள்கைகளுக்கும் தற்கால சமுதாயத்திற்கும் எந்த சம்மந்தமும் இனி இல்லை, என்ற போதிலும். 

இந்தக் கொள்கைகள், அவை உருவான காலகட்டத்தில் எதோ ஒரு அளவுக்கு பொருத்தமாக இருந்திருக்கலாம் என்றே வைத்துக்கொண்டாலும்கூட, இன்று அவை வழிகாட்டியாக அல்லாமல் எச்சரிக்கையாகவே ஆகிவிட்டிருக்கின்றன.

(ஆனால்) இத்தலைவர்களுக்கு , பழைய அமைப்புகளின் மீது இருக்கும் விளக்குதற்கரிய மதிப்பு, தங்கள் சமுதாயத்தின் அடித்தளங்களை ஆராய்வதில் அவர்களுக்குத் தயக்கத்தை – ஏன், எதிர்ப்பு உணர்வையே கூட – ஏற்படுத்துகிறது.

.....
நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்வதில் எந்தவித அக்கறையும் அற்றவர்களாக ஹிந்து வெகுஜன மக்கள் இருக்கிறார்கள் என்றால், ஹிந்துத் தலைவர்களும் அவ்வாறே. இன்னும் மோசமாக, இந்த நம்பிக்கைகளை யாராவது விலக்க முயன்றால், இத்தலைவர்கள் அவற்றின்மீது ஒரு அநியாயத் தீவிரம் கொண்டு விடுகிறார்கள்.

இதற்கு மகாத்மாவும் விதிவிலக்கல்ல.

மகாத்மாவுக்கு சிந்தனையில் நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. அவர் ஞானிகளின்  வழியில் செல்ல விரும்புகிறார். 
பழங்கருத்துகள் மீது பெருமதிப்பு நிறைந்த பழைமைவாதியைப் போல, ‘எங்கே தாம் சிந்திக்கத் தொடங்கினால்,  தாம் கெட்டியாகப் பற்றிக்கொண்டிருக்கும் கொள்கைகளும், ஸ்தாபனங்களும் நிலைகுலையுமோ’ என்று, பயப்படுகிறார். 

அவர் பரிதாபத்துக்குரியவர். ஏனெனில், ஒவ்வொரு சுதந்திரச் சிந்தனைச் செயல்பாடும் நிலையானதாகத் தோற்றமளிக்கும் உலகின் ஒரு பகுதியையேனும் உலுக்கிச் சிதைத்துவிடக் கூடியது தான்.

-------------------------------------------------------------------------
Annihilation of Casteக்கு, காந்தி தனது 'ஹரிஜன்' இதழில் எழுதிய பதிலுக்கு, அம்பேத்கர் எழுதிய பதிலில் என்னைக் கவர்ந்த சில பகுதிகள் இவை.

அனேகமா முன்னாடியே யாராவது (நல்லாவே) மொழிபெயர்த்திருப்பாங்க. ஆனா, அதை நீங்க படிக்காததால தான் இங்க வரைக்கும் இதைப் படிச்சிருக்கீங்க.

Comments

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director